Metro Mirror
Registered as News Website Under Ministry of Media HOT & Fast Media Network in Sri Lanka
சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தல் தாமதமின்றி விரைவாக நடாத்தப்படும்; உள்ளுராட்சி அமைச்சர் உறுதி.!
சாய்ந்தமருது நகர சபைக்கான அலுவலகத்தை விரைவில் திறக்க உள்ளூராட்சி அமைச்சர் பணிப்பு.!
சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்தல் தொடர்பாக அமைச்சருடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு.!
08/06/2026
🛑கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது GMMS மாணவர்கள் அசத்தல் சாதனை.!
🛑ஒரு சாம்பியன் பட்டம், இரு ரன்னர்-அப் வெற்றிகள்; 7 மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவு
(நூருல் ஹுதா உமர்)
கல்முனை கார்மல் பத்திமா கல்லூரியில் கடந்த 06.06.2026 அன்று இலங்கை பாடசாலை செஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (KM/KM.G.M.M.S) மாணவர்கள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியின் 10 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற ஏ.மிஷால் உமைர் சாம்பியன் பட்டத்தை வென்று தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார். அதேவேளை, 6 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.எச்.ஹஸிமா மர்யம் முதல் ரன்னர்-அப் இடத்தையும், 8 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.எச்.முஹம்மது ஹாஸிக் இரண்டாம் ரன்னர்-அப் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும், எம்.எச்.ஹஸிமா மர்யம் (தரம் 1), எம்.எச்.முஹம்மது ஹாஸிக் (தரம் 3), எம்.ஏ.ஏ.அபீக் அஹமட் (தரம் 2), எம்.எஸ்.யூசுப் ஐமான் (தரம் 2), எம்.ரீ.எம். மஹ்தி ஹசன் (தரம் 3), ஏ.மிஷால் உமைர் (தரம் 4), எம்.ஏ.கே. அஹமட் ஸைன் மஹ்தி (தரம் 5) ஆகிய ஏழு மாணவர்கள் மாகாண மட்ட செஸ் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
இளம் வயதிலேயே செஸ் விளையாட்டில் தமது திறமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள இம்மாணவர்களின் வெற்றி, பாடசாலைக்கும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்விச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இம்மாணவர்களுக்கு வழிகாட்டி ஊக்கமளித்த பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி அதிபர் யூ.எல். றின்ஸா பர்வின், பயிற்றுவிப்பாளர்களான இஸ்மாயில் அஸ்லம் சுஜா மற்றும் எம்.ஏ.ஏ.அதீப் ஆகியோருக்கும், மாணவர்களின் வெற்றிக்கு பின்னணியில் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
06/06/2026
ரஹ்மத் மன்சூர் ஏற்பாட்டில் சீன அரசினால் கல்முனை பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்..!
(எம்.என்.எம்.அப்ராஸ்)
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில்
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல்
உபகரணங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ்.ரிசானா தலைமையில் (04) இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
இதன்போது கெளரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“சீன - இலங்கை சகோதரத்துவ பாசம்” எனும் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும் மனிதாபிமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
இதன்போது, மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலந்து கொண்டஅதிதிகளுக்கு பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் ஆசியரியர்கள் மாணவர்கள்,பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
06/06/2026
அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு கணனித்தொகுதி & கதிரைகள் அன்பளிப்பு.!
(நூருல் ஹுதா உமர்)
கல்முனை கல்வி வலய கமு/கமு/ அல்-பஹ்ரியா மகா வித்தியாலய பழைய மாணவிகள் சங்கத்தினால் பாடசாலை அலுவலகப் பாவனைக்கான கணனித்தொகுதி அன்பளிப்பும், எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த நவீன கற்கைகள் மண்டபத்திற்காக 50 கதிரைகள் எம்.பீ. முகையதீன் அவர்களின் மகன் எம்.எம். நளீம் முகையதீன் அவர்களினால் அன்பளிக்கும் நிகழ்வும், ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடலும்@ எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச். றியாஸா, என். வரணியா சாந்தரூபன், எம்.எல்.எம். முத்தரிஸ், அஸ்மா அப்துல் மலீக், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அசீஸ், அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர், கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழக பயிற்றுவிப்பாளர் யூ.எல். பழீல் உட்பட பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பழைய மாணவிகள் சங்க நிர்வாகிகள், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் நலன்விரும்பிகள் மற்றும் அதிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது பாடசாலை நிர்வாகப் பணிகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக அலுவலகப் பயன்பாட்டிற்கான கணனித்தொகுதி பழைய மாணவிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த நவீன கற்கைகள் மண்டபத்திற்கு 50 புதிய கதிரைகளும் எம்.பீ. முகையதீன் அவர்களின் மகன் எம்.எம். நளீம் முகையதீன் அவர்களின் பிரதிநிதியாக அவரது சகோதரர் நவாஸ் முஹைதீன் அவர்களினால் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் பெருநாள் சிறப்பு உணவுகளும் பரிமாறப்பட்டன. பாடசாலையின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கி வரும் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் இந்தப் பணியை அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகம் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் இத்தகைய ஒத்துழைப்புகள் தொடர வேண்டும் என நம்பிக்கை வெளியிட்டனர்.
06/06/2026
🛑"வெண்ணை திரண்டு வரும்போது தாலி உடைந்த சம்பவம்"
🛑ஹரீஸ் நிகழ்த்தினாரா.?
👉இதோ அவர் தரும் விளக்கம்
✍️நூருல் ஹுதா உமர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசு அவர்கள் நான் கூறிய விடயங்களை பிழையாக விளங்கி சில கருத்துக்களை கூறியுள்ளார். தமிழ்- முஸ்லிம் ஒற்றுமையை விரும்பும் மக்கள் அவருடைய கருத்தினால் வேதனைப்பட்டிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன். உண்மையில் கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு சமாதான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக எம்.ஏ சுமந்திரன் அவர்களிடம் வேண்டியிருந்தேன். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ்- முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் இந்த உப பிரதேச செயலக பிரச்சினைக்கு சமாதானமான ஒரு தீர்வை எட்ட வேண்டும். தமிழ்- முஸ்லிம் மக்கள் எல்லையுடனான ஒரு நிர்வாக அலகை பெற வேண்டும் என்பது கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். இதைத்தான் பேச்சுவார்த்தை ஊடாக செய்யுங்கள் என்று வேண்டியுள்ளேன் என உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடந்து அங்கு பேசிய அவர்,
இதை வலியுறுத்தித்தான் நான் எனது கருத்துக்களையும் அது சார்ந்த விடயங்களையும் கூறினேன். அதே நேரம் கல்முனைத் தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி நிதன்சன் அவர்களும். என் மீது சில வினாக்களைத் தொடுத்துள்ளார்.
குறிப்பாக கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை. நடைபெற்றதாகவும், அந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் உடன்பாட்டுக்கு வர இருந்ததாகவும், நான்தான் அந்தத் தீர்வு எட்டுவதற்குத் தடையாக இருந்தேன் என்ற ஒரு அபாண்டத்தை தெரிவித்திருக்கின்றார்.
இந்த பேச்சுவார்த்தைகள் 2017 ஆம் ஆண்டு நவம்பரில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் அவரது அமைச்சிலும் இன்னும் சில இடங்களிலும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது,
அதில் தமிழ்த் தரப்பிலிருந்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர்களாக இருந்த ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர்களுடன் தற்போதைய பொது செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட எம்.பிக்களும், முஸ்லிம் தரப்பிலிருந்து ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களும் நான் உட்பட அரசியல் முஸ்லிம் பிரதிநிதிகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டோம்.
அந்தப் பேச்சுவார்த்தையில் எல்லோரும் சாட்சியாக இருக்கின்றார்கள் எந்தத் தீர்வும் முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் எட்டவில்லை. கடைசியில் "வெண்ணை திரண்டு வரும்போது தாலி உடைந்த சம்பவம்" எதுவும் என்னால் அங்கு நடைபெறவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயம். எந்த இணக்கப்பாட்டுக்கும் வராத நிலையிலேயே பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
அதன் பின்பு. ஈஸ்டர் குண்டு தாக்குதல் பின்பு கல்முனையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து கொழும்பில் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் இல்லத்தில் இதே தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்மந்தன் ஐயா தலைமையிலான இதே சுமந்திரன், மாவை போன்ற தலைவர்களும் கோடீஸ்வரன் எம்.பி உட்பட பல தமிழ் பிரதிநிதிகளும் அதே நேரம் முஸ்லிம் தரப்பில் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன் இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள நிஸாம் காரியப்பர் உட்பட நாங்களும் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படவில்லை.
அந்த இடத்தில் என்னால் தான் தீர்வு தடைப்பட்டது என்று யாரும் கூறவுமில்லை, கூறவும் முடியாது. அங்கு ஒரு சாத்தியமான தீர்வை எட்டுவதற்கு முடியாமல் போய்விட்டது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்பை சார்ந்த ஒருவரோ அல்லது சுமந்திரன் போன்ற யாரோ ஒருவர் வந்து கூற வேண்டும் நாங்கள் கலந்து கொண்ட எல்லா முஸ்லிம் தலைவர்களும் தீர்வுக்கு ஒத்துக்கொண்டாலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசால் தான் தீர்வு எட்டப்பட முடியாமல் போகி விட்டது என்று. என்ன தீர்வு எட்டப்பட்டது என்பதையும் அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தான் இரண்டு விடயங்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே வெறுமனே தமிழ் முஸ்லிம் உறவு மேம்பட்டு வருகின்ற நேரத்தில் எங்களை நோக்கி வீணான தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரம் உங்களுடைய வார்த்தைகள் சில இடங்களில் வரம்பு மீறியதாக இருப்பது கவலை அளிக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைக்காகப் பேசுகின்ற முன்னாள் எம்.பி கலையரசன் அவர்களையோ அல்லது கவீந்திரன் கோடிஸ்வரன் எம்.பி அவர்களையோ அல்லது எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் எம்.பி போன்றவர்களையோ இதுவரையும் நாங்கள் பொதுவெளியில் இவர்கள் இனவாதிகள் என்று நாங்கள் கூறுவதில்லை. அது அவர்கள் சமூகம் சார்ந்த விடயத்தைப் பேசுகிறார்கள் என்ற ஒரு புரிந்துணர்வு எங்களுக்கு இருக்கின்றது. ஆனால் எடுத்தவுடன் எங்களை. நோக்கி கடும் சொற்றொடர்களைப் பாவித்து கருத்துக்களை வெளியிடுவது வேதனையான விடயம்.
முக்கியமாக நான் தமிழ் மக்களை நோக்கி புலிச்சாயம் பூசியதாக முன்னாள் எம்.பி தவராசா கலையரசன் அவர்கள் கூறியுள்ளார். அது அப்பட்டமான பொய்யாகும். நான் எங்கும் தமிழ் மக்களை நோக்கி புலிச்சாயம் பூசி கருத்துக்களை வெளியிடவில்லை.
தமிழ்- முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து கொள்ள முஸ்லிம், தமிழ் சிவில் சமூகங்களை பேச்சுவார்த்தைக்கே நான் அழைத்திருந்தேன். இதில் என்ன தவறிருக்கிறது என்று கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.
முன்னாள் எம்.பி கலையரசன் மற்றும் சட்டத்தரணி நிஷான்சன் போன்றோர்களிடம் நான் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் நீங்களே சொல்லி விட்டீர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக நான் இருந்தேன் என்று. இது முஸ்லிம் சமூகத்திலும் பிழையான அர்த்தங்களை கொடுக்கும். இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக இது சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இதற்கப்பால் உடனடியாக நீங்கள் உண்மையில் ஒரு தீர்வினையோ இரு சமூகங்களின் சமாதானத்தையோ விரும்புகின்ற தரப்பு என்றால், இதுவரை நான் குறுக்கே நின்றேன் என்று சொல்வதால் நான் இப்போது ஒரு பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி இல்லாத இந்த சூழ்நிலையில், இப்பொழுது இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, குறிப்பாக தமிழரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் தமிழ் தரப்பின் குழுவும் அதே போன்று முஸ்லிம் தரப்பில் உள்ள கல்முனை தொகுதி பிரதிநிதி நிஸாம் காரியப்பர் மற்றும் ஏனைய அவர்களுடைய முக்கியஸ்தர்களை வைத்தும் பேச்சுவார்த்தை நடத்தலாம். இது உங்களுக்கு ஒரு தெரிவாக இருக்கிறது.
இரண்டாவது தெரிவாக நேரடியாக கல்முனை தமிழ் சிவில் சமூகமும் கல்முனை முஸ்லிம் சிவில் சமூகமும் அதாவது தமிழ் சிவில் சமூகத்தில் கோயில் தர்மகர்த்தாக்கள், புத்திஜீவிக் கொண்ட ஒரு குழுவும், முஸ்லிம் சிவில் சமூகத்தில் பள்ளிவாசல் பிரதிநிதிகள், புத்திஜீவிகளைக் கொண்ட குழுவும் நிரந்தர தீர்வு நோக்கிய பேச்சுவார்த்தை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதில் நீங்கள் என்னை நோக்கி குற்றம் சாட்டி இருப்பதால் நான் இந்த பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.
தமிழ்- முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் இருந்து ஆர்க்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழி ஏற்படுத்துமாறும் வேண்டுகிறேன்.
கல்முனை நகரில் வாழும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு நிர்வாக சிக்கல் இருப்பது வெளிப்படை உண்மை இதனை கவனத்தில் கொண்டே எனது ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சி பொது செயலாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கு தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்காகவே அழைப்பு விடுத்திருந்தேன். இந்த அழைப்பை எங்களின் நல்லெண்ணமாக கொண்டு இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதனை கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
06/06/2026
ஒற்றுமையின் பலம் – வெற்றியின் வழி: ACMC புனர்நிர்மாணப் பணி சம்மாந்துறையில் இருந்து ஆரம்பம்.!
(நூருல் ஹுதா உமர்)
“ஒற்றுமையின் பலம் – வெற்றியின் வழி” என்ற தொனிப்பொருளின் கீழ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புனர்நிர்மாணம் மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் முதற்கட்ட கலந்துரையாடல் இன்று சம்மாந்துறை கருவாட்டுக்கல்-03 கிராம சேவகர் பிரிவல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், அமைப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்பக் கூட்டத்தில், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிரியர் ஏ.சி.எம்.நயீம், ஏ.எச்.எம்.காலித், வை.எல்.பசீர், மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினரான எம்.ரீ.எம்.லாபிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கட்சியின் புனர்நிர்மாணப் பயணத்தை சம்மாந்துறையில் இருந்து ஆரம்பிப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாக அமையும் என கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும், கட்சியின் அமைப்பை கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை பலப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எதிர்கால அரசியல் பயணத்திற்கான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகக் கருதப்படுகின்றது
04/06/2026
தென்கிழக்குப் பல்கலைக்கழக சுதந்திர ஊழியர் சங்கத்தின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியவை; உபவேந்தர் ஜுனைடீன் பாராட்டு.!
தென்கிழக்குப் பல்கலைக்கழக சுதந்திர ஊழியர் சங்கத்தின் (South Eastern University Independent Staff Union) 4ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று (03.06.2026) பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலைய (Staff Development Centre) கேட்போர் கூடத்தில் சங்கத்தின் பதில் தலைவர் எஸ்.எம். கலீல் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதீதிகளாக தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் அவர்களும் தென் கிழக்கு பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்கள் தனதுரையில்..
சுதந்திர ஊழியர் சங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளைப் பாராட்டியதுடன், பணியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஆரோக்கியமான உறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்குவதில் சங்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
“Independent Staff Union” என்ற பெயருக்கு ஏற்ப, சங்கம் சுயாதீனமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டு வருவதை அவதானிக்கிறேன், கூறப்படுகின்ற கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் நடைமுறையில் செயல்படுத்தும் பண்பே இச்சங்கத்தின் தனித்துவமான அடையாளமாகும்.
பணியாளர்களின் தேவைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் நிர்வாகம் எப்போதும் திறந்த மனதுடன் அணுகி வருகிறது. பணியாளர்கள் முன்வைக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் ஆலோசனைகளும் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்கு வலுசேர்ப்பவையாக இருத்தல் வேண்டும்.
பாதகமான விடயத்தை நமது தரப்பினர் என்பதற்காக ஆதரிக்க முடியாது. பாகுபாடின்றி, நிறுவன நலனை முன்னிறுத்தும் அனைத்து கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டியவை.
மேலும், எவரிடமும் பாகுபாடு காட்டாது செயற்படுவது ஒரு ஆரோக்கியமான நிர்வாகத்தின் அடிப்படை அம்சமாகும்.
தேவையான சந்தர்ப்பங்களில் தேவையான விடயங்களைப் பொறுப்புடன் எடுத்துரைப்பது அமைப்பின் வளர்ச்சிக்குத் தேவையான ஜனநாயகப் பண்பாடாகும்.
பணியாளர்கள் தங்களது கருத்துக்களை அச்சமின்றி சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதும் மிகவும் அவசியமானது
பணியாளர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், சில விடயங்களில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சில விடயங்களில் அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்வு கிடைப்பதை உறுதிப்படுத்திய பின்னரே முடிவுகள் எடுக்கப்படும்.
அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் சில நேரங்களில் பிறருக்கு அநீதியை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, விரைவான செயற்பாட்டுக்கும் நியாயமான தீர்மானத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுவதே எமது நிர்வாகத்தின் அணுகுமுறையாகும் என்று மேலும் தெரிவித்தார்.
சங்கத்தின் செயலாளர் எம்.ஏ.சி.எம். சிராஜ் மற்றும் பொருளாளர் எம்.ஐ. ஜாபீர் ஆகியோரது நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் நிர்வாக சபை, ஆலோசகர் குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.
எம். வை அமீர்
03/06/2026
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் விழிப்புணர்வு.!
(எம்.என்.எம்.அப்ராஸ்)
உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நடைபவனி மற்றும் கருத்தரங்கு மாவட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் இன்று (03/06/2026) இடம் பெற்றது .
இதன்போது பாடசாலை அதிபர் எம்.எம்.ஹிர்பகான்,
பிரதி அதிபர்களான எம்.எஸ். நபார்,எம்.ஏ.எம்.சிறாஜ்,
உதவி அதிபர் ஏ.எம்.பாஹிம், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் கே.சிவக்குமார், ஆசிரியர்கள் மாணவர்கள்,கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச உலக சமுத்திர திமானது ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 08 திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. உலக சமுத்திர தினம்,உலக சுற்றாடல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக சுற்றாடல் அமைச்சானது ஜுன் மாதம் 01தொடக்கம் 08ம் திகதி வரையான காலப்பகுதியை தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுதியுள்ளது.
இதனடிப்படையில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையானது மாணவர்கள் ,பொதுமக்கள், ஏனைய அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கடல் சூழல் மாசடைதல், இதன் பாதிப்புகள், தற்காலத்தில் கடல் சூழலை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dehiwala