Wide Angle
Wide Angle is a platform for all small scale and large scale industries to promote their Company/Pro
28/02/2022
'தேசத்துக்காக சண்டையிட்டே ஆகவேண்டும்' - போர்க்களத்தில் உக்ரைன் குத்துச்சண்டை சகோதரர்கள்.
கீவ்: ரஷ்யாவின் படையெடுப்பை சமாளிக்க, உக்ரைன் நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை வீரர்களும், சகோதரர்களுமாகிய கிளிட்ச்கோ சகோதரர்கள் இருவரும் ராணுவத்தில் இணைந்து போரிட்டு வருகின்றனர்.
உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்கவைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்தப் போர் பதற்றத்தால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். தரை, வான் மற்றும் கடல் என அனைத்து மார்க்கத்திலும் ரஷ்யா தனது படையெடுப்பை நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலை சமாளிக்க, உக்ரைன் அதிபர் தமது குடிமக்களுக்கு போராட அழைப்பு விடுத்த நிலையில், முன்னாள் குத்துச்சண்டை வீரர்கள் இருவர் ராணுவத்தில் இணைந்து போராடி வருகின்றனர். இருவரும் தற்போது தங்கள் சொந்த நாட்டைக் காக்க ராணுவப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். 2014-ம் ஆண்டு முதல் உக்ரைன் தலைநகர் கீவின் மேயராக இருந்து வரும் விட்டலி கிளிட்ச்கோ, போர்ச் சூழல் நெருங்கிய நிலையில், இந்த மாதத் தொடக்கத்திலேயே ஆயுதம் ஏந்த தயாராக இருப்பதாக அறிவித்தார்.
கிளிட்ச்கோ சகோதரர்கள் குத்துச்சண்டை போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர்கள். இருவருமே ஹால் ஆஃப் ஃபேம்களாக அறியப்படுபவர்கள். இதனிடையே, போர் தொடர்பாக விட்டலி கிளிட்ச்கோ பேசும்போது, "எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் தேசத்துக்காக சண்டையிட்டே ஆகவேண்டும். கீவ் நகரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. காவல்துறை மற்றும் ராணுவப் படைகளுடன் இணைந்து பணியாற்றுவதே இப்போது எங்களின் முன்னுரிமை. கீவ் நகரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ராணுவ வீரர்களாக மாறத் தயாராகி உள்ளனர். நான் என் நாட்டை நம்புகிறேன், என் மக்களை நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
50 வயதாகும் அவர் சொன்னபடியே இப்போது உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து பாதுகாப்பு பணிகளைச் செய்துவருகிறார். போரின் முதல் நாள் இவர்கள் இருவரும் ஆயுதங்கள் ஏந்தியபடி பேட்டி அளித்துள்ளனர். அதில், "தேசத்தின் மீதான அன்பே இந்தப் பணியை செய்யத் தூண்டியது. உக்ரைனிய மக்கள் வலிமையானவர்கள். இறையாண்மை மற்றும் அமைதிக்காக ஏங்கும் மக்கள். ரஷ்ய மக்களை தங்கள் சகோதரர்களாகக் கருதும் மக்கள். நாங்கள் அடிப்படையில் இந்தப் போரை விரும்பவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த புத்தியில்லாத போரில் வெற்றியாளர்கள் இருக்கப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளனர்.
இறுதிகட்டத்தை எட்டியது 5ஜி நெட்வொர்க்: மத்திய அமைச்சர் தகவல்
5ஜி நெட்வொர்க் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்திய தொலைதொடர்பு துறையினர் தகுதிவாய்ந்த வெளிநாட்டு கொள்முதலாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக, 'இந்தியா டெலிகாம் 2022' எனும் பிரத்யேக சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று தொடங்கியது. இந்திய அரசின் வர்த்தகத் துறையின் சந்தை அணுகல் முன்முயற்சி திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்புத் துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் 2022 பிப்ரவரி 8 முதல் 10 வரை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
கண்காட்சியைத் தொடங்கிவைத்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசும்போது, ''பெரியதொரு மின்னணு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இன்று, இந்தியாவில் மின்னணு சாதன உற்பத்தி 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்குகிறது. 20%-க்கும் அதிகமான வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் இது வளர்ந்து வருகிறது. ஒரு பெரிய செமிகண்டக்டர் திட்டத்தை இப்போது நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். பல்வேறு பொருட்கள், தொழில்முனைவோர் மற்றும் 85,000 பொறியாளர்களை உருவாக்குவதற்கான மிக விரிவான திட்டமாக இது உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தவரை, 4ஜி கோர் மற்றும் ரேடியோ நெட்வொர்க் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 5ஜி நெட்வொர்க் அதன் இறுதிகட்ட வளர்ச்சியில் உள்ளது. நாடு இன்று 6ஜி தரநிலைகளின் வளர்ச்சியில், 6ஜி சிந்தனை செயல்பாட்டில் பங்கேற்று வருகிறது'' என்றார் மத்திய அமைச்சர்.
26/02/2022
இபிஎப் செலுத்த தவறினால் நிறுவனங்களே பொறுப்பு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி: பணியாளர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு நிறுவ னங்களின் பங்களிப்போடு செலுத்தப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) திட்டத்தில் மாதத் தவணை செலுத்தத் தவறினால் அதற்கு தொழில் நிறுவனங்கள்தான் பொறுப்பு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாதத் தவணை செலுத்தத் தவறுவது மற்றும் தாமதமாக செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கு நிறுவனங்களே பொறுப்பு என்றுநீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அபய் எஸ் ஓகா ஆகியோரடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
26/02/2022
நிலைமை சரியில்லை; எல்லைகளைக் கடக்க முயற்சிக்க வேண்டாம்: உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை.
கீவ்: உக்ரைனில் உள்ள இந்தியர்கள், இந்தியத் தூதரக அதிகாரிகளின் முறையாக வழிகாட்டுதல் இல்லாமல் எல்லைகளை நோக்கிச் செல்ல வேண்டாம் என கீவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதல் 3வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. தலைநகர் கீவை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்குள்ள ராணுவ தளத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால், ராணுவத் தளத்தை ரஷ்யப் படைகள் நெருங்கவிடமாட்டோம் என்று உக்ரைன் உறுதிபடத் தெரிவித்துள்ளது.இரண்டு நாட்களாக களத்தில் உக்ரைன் தனித்துப் போராடியது. இந்நிலையில், ஸ்வீடன் ராணுவ உதவி செய்வதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவும் என்ன மாதிரியான உதவிகளைச் செய்யலாம் என ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் ஜான் கிர்பி, உக்ரைனுக்கு உதவுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளது. போர் இன்னும் முற்றும் சூழல் நிலவுகிறது.
இதனிடையே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இந்தியர்கள் சிலரை மீட்க இன்று முதற்கட்டமாக ஏர் இந்தியா விமானம் போலந்து செல்கிறது.
ஆனால், உக்ரைனின் கீவ், கார்கிவ், லிவ், டெர்னோபில் எனப் பல பகுதிகளிலும் இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். ஏறத்தாழ 20000 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முன்னதாக நேற்று உக்ரைனின் எல்லைகள் வழியாக அண்டை நாடான போலந்து, ருமேனியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை வந்தடையுமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு வரும்போது இந்தியர்கள் தங்களின் கார்களில், கைகளில் இந்திய தேசியக் கொடியைக் கொண்டு வரவும் என்று வலியுறுத்தியிருந்தது.
ஆனால், பிப்.26 தேதியிட்டு வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில், உக்ரைனை ஒட்டிய பல்வேறு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனால், இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றும் வழிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிற நாடுகளின் எல்லை வரை இந்தியர்களை பத்திரமாகக் கொண்டு செல்வதில் புதிதாக பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. ஆகையால் தூதரக அதிகாரிகளிடமிருந்து வழிகாட்டுதல்கள் வராமல் எக்காரணம் கொண்டும் எல்லை நோக்கிய பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்.
உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் உள்ள இந்தியர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கவும். அமைதி காக்கவும். கையில் இருக்கும் உணவு, தண்ணீரைக் கொண்டு நிலைமையை சமாளிக்கவும். தேவையற்று வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.
இவ்வாறு புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25/02/2022
திருப்பதிக்கு வயது 892: பெயர் சூட்டியது ராமானுஜர்- திருப்பதி தேவஸ்தான பெரிய ஜீயர் தகவல்:
திருப்பதி நகருக்கு வயது 892. இதனையொட்டி, நேற்று திருப்பதி உதயமான நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வைணவ ஆச்சாரியரான ராமானுஜர் கி.பி 1130-ம் ஆண்டில் திருப்பதி வந்தபோது, கோவிந்தராஜ புரமாக இருந்த ஊர், திருப்பதி என பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சில கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்த பின்னர், திருப்பதி நகரம் உருவாகி 892 ஆண்டுகள் ஆனதாக தெரிய வந்ததால், நேற்று திருப்பதி நகரம் உதய தினத்தை திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டி தலைமையில் விழாவாக கொண்டாடப்பட்டது. திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி திருக்கோயிலில் இருந்து உற்சவருக்கு பூஜைகள் செய்த பின்னர், அங்குள்ள ராமானுஜரின் சன்னதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் திருப்பதி நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிந்தராஜ சுவாமி கோயில் வந்தடைந்தது.
சிவ பக்தனான கிருமி கண்ட சோழன் எனும் அரசன், வைணவ கோயில்களை அழித்து வந்தார். இதில் ஒரு கட்டமாக, சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜ பெருமாளின் சிலையை கடலில் வீசினார். அப்போது சிலர் அங்கிருந்த கோவிந்தராஜரின் உற்சவ சிலையை மறைத்து திருப்பதிக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டு வந்தனர். இதனை அறிந்த ராமானுஜர் அவரது 112 வது வயதில் கடந்த 1130-ம் ஆண்டு திருப்பதிக்கு விஜயம் செய்தபோது, கோவிந்தராஜர் கோயிலில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்தார். மேலும் வைணவ வைகானச முறைப்படி பூஜை முறைகளை வழி வகுத்தார். இதனால், கோவிந்தராஜபுரம் என இப்பகுதிக்கு பெயர் வந்தது. அது சில காலத்துக்கு பின்னர் ராமானுஜபுரம் என்றும் மக்கள் அழைக்கலாயினர். ஆனால், கீழ் திருப்பதியில் அலர்மேலு மங்காபுரத்தில் பத்மாவதி தாயார் வீற்றிருப்பதாலும், மலை மீது அவரின் பதி அதாவது கணவரான வெங்கடேச பெருமாள் குடி கொண்டிருப்பதாலும் ‘திரு’ மற்றும் ‘பதி’ என்ற பெயர் ராமானுஜரால் சூட்டப்பட்டது. மகாலட்சுமியும், அவரது கணவர் பெருமாளும் குடிகொண்டுள்ள தலம் என இதற்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டது என ஜீயர் தெரிவித்தார்.
இது குறித்து திருப்பதி எம்.எல்.ஏ கருணாகர் ரெட்டி கூறுகையில், ‘‘கோவிந்தராஜ புரம் என பெயர் வைத்தற்கான கல்வெட்டுகள் தற்போதைய திருப்பதி கோவிந்த ராஜர் கோயிலில் உள்ளன. கடந்த 1130-ம் ஆண்டு இப்பெயர் சூட்டப் பட்டுள்ளது. ஆதலால் இன்றோடு திருப்பதிக்கு 892 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை தெரியாத ஒரு விஷயம் தற்போது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. ஆதலால், இதனை திருப்பதிவாசிகள் கொண்டாடி மகிழ வேண்டும்’’ எனக் கூறினார்.
25/02/2022
திரைப்படமாகிறது பஸ்டர் கீட்டனின் வாழ்க்கை:
மறைந்த நகைச்சுவை நடிகர் பஸ்டர் கீட்டனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் சினிமா ஒன்று உருவாகவுள்ளது. இதனை ‘ஃபோர்டு vs ஃபெராரி’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கவுள்ளார்.
ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஃபோர்டு vs ஃபெராரி’. போர்ட் நிறுவனத்துக்கும் ஃபெராரி நிறுவனத்துக்கும் இடையே நடந்த பனிப்போரை பற்றி பேசுகிற இப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. இதில் மேட் டேமன், கிறிஸ்டியன் பேல் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்துக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.
24/02/2022
24/02/2022
24/02/2022
23/02/2022
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் - ‘சுவிஸ் ரகசியங்கள்’ ஆவணத்தில் தகவல்.
சுவிட்ஸர்லாந்தில் உள்ள கிரிடிட் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி இருந்த உலகளாவிய அரசியல்வாதிகள், உயர்மட்ட அதிகாரிகள், போதை கடத்தல் தலைவர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள், ஜெனரல்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரான ஜெனரல் அக்தர் அப்துர் ரஹ்மான் கான் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் முஜாஹிதீன் அமைப்பின் உருவாக்கத்தில் மூளையாக கருதப்படுபவர்.
கிரிடிட் சுவிஸ் வங்கி மூலம் அவர் முஜாஹிதீன் அமைப்புக்கு நிதி உதவி வழங்கி இருப்பதாக ‘சுவிஸ் ரசியங்கள்’ கூறுகின்றன.
ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் ஆக்கிரமித்தபோது, அப்படையை வெளியேற்ற ஆப் கானிஸ்தானில் முஜாஹிதீன் அமைப்புக்கு சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் நிதி உதவிவழங்கின. இந்த நிதி உதவியானது கிரிடிட் சுவிஸ் வங்கியில் உள்ள அக்தர் அப்துர் ரஹ்மான் கான் தொடர்புடைய கணக்குகளுக்குச் சென்றுள்ளது. அவர் அந்தப் பணத்தை முஜாஹிதீன் அமைப்பினருக்கு வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18,000-க்கு மேற்பட்ட கணக்கு
கிரிடிட் சுவிஸ் வங்கியில் 1940 முதல் 2010 வரையில் திறக்கப்பட்ட 18,000-க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் கணக்குகளில் மொத்தமாக 100 பில்லியன்டாலர் சொத்துகள் இருப்பதாகவும், அதில் பிரச்சினைக்குரிய பட்டியலில் உள்ள நபர்களின் கணக்குகளில் 8 பில்லியன் டாலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தக் கணக்குகளில் 600 கணக்குகள் 1400 பாகிஸ்தானியர்கள் தொடர்புடையது என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
வெளிநாடுகளில் பணம் பதுக்கி இருந்த நபர்களின் பட்டியல் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அதேபோல் 2017-ல்பாரடைஸ் பேப்பர்ஸ், 2016-ல் பனாமா பேப்பர்ஸ் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Sathuvachari
Vellore
632009
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |
| Saturday | 9am - 5pm |
| Sunday | 9am - 5pm |