Light For Learning
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Light For Learning, Non-Governmental Organization (NGO), Melbourne.
14/03/2026
கல்முனை தொகுதி மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான எமது முன்னெடுப்பிற்கு ஜனாதிபதி செயலகம் ஊடாகக் கிடைத்த முக்கிய அங்கீகாரம்
*****************************************************
பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த கல்முனைத் தொகுதியின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கி நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். கடலரிப்பினால் வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவர்கள் முதல், முறையான பல வசதி இன்றி தவிக்கும் மக்கள் வரை அனைவரின் குரலாக எமது அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீமுதீன் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் முன்வைத்த கோரிக்கைகள் உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளன.
"இன்று நாம் எடுக்கும் இந்த நடவடிக்கை, எமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் அபிவிருத்தி அடைந்து கொண்டு இருக்கும் தொகுதியை பரிசளிக்கும்."
துணை நின்றுகொண்டு இருக்கும் அனைவருக்கும் நன்றி! அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்கிறோம்!!இணைந்திருங்கள்!!
மாற்றமெனும் பேரொளியின் தொடக்கமும் அவளே...!
எத்தனையோ போராட்டங்கள் அவளைப் புதிய அவதாரமாகச் செதுக்கியிருந்தாலும், இன்றும் பல பெண்கள் தங்களின் கனவுகளைத் தொடர முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்காகவே "Light for Learning" சுடரை ஏந்திப் பயணிக்கின்றது.
இந்த மாற்றத்தின் முகவரியாய்..., சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணின் விடியலாய்...,அன்பினால் ஆளும் பேராளுமை "மர்யம் மன்சூர்"அவர்களுக்கும் மற்றும் மாற்றத்துக்கான அனைத்து அக்கினி சிறகுகளுக்கும் சமர்ப்பிக்கப்படும் ஒரு சிறிய சமர்ப்பணம் இது!
இது வெறும் கொண்டாட்டமல்ல... மாற்றத்திற்கான ஒரு அறப்பயணம்.நீங்கள் உயரத் தயாரென்றால், உங்களை உயர்த்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
மாற்றத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வையுங்கள்…!ஒன்றிணைந்து ஒரு புதிய சமுதாயத்தைப் படைப்போம்….!!
இனிய மகளிர் தின வாழ்த்துகள்
06/03/2026
சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீமுதீன் முன்வைத்த கல்முனை தொகுதி அபிவிருத்தி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்து, ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஏ.ஆர் மன்சூர் பௌண்டேசன் மற்றும் லைட் போ லேர்னிங் (light for learning) அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீமுதீன் அவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த கோரிக்கையை கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு , தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு, ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் திரு. சி.ஏ.கே. பரணமன அவர்களால் 2026.02.18 அன்று கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், கல்முனை தொகுதி அபிவிருத்தி மற்றும் கிழக்கு மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்களை ஆராய்ந்து, அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இதில் கல்முனை தொகுதி நீண்ட காலமாக எதிர்நோக்கும் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகள், கிழக்கு மாகாண கடலரிப்பு அபாயம் , பெண்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த எதிர்கால திட்டங்கள்,சுனாமி வீட்டுத்திட்டம் சார்ந்த முழுமை பெறா அபிவிருத்தி, வைத்தியசாலைகளின் தரமுயர்த்தல் , நவீன நூலகங்களின் தேவையும் பராமரிப்பும் , சாய்ந்தமருது தோணாவின் நிலையான அபிவிருத்தி ,மாவடிப்பள்ளி பால அபிவிருத்தி,திண்ம கழிவகற்றும் முறைமையும் தீர்வும் மற்றும் தொகுதி சார்ந்த பல முழுமையான அபிவிருத்தி திட்டங்களின் தேவைகள் குறித்து சட்டத்தரணி மரியம் முன்சூர் நளீமுதீன் அவர்கள் ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைத்த கோரிக்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விசேடமாக கிழக்கு மாகாண கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கடலரிப்பு கடுமையாக அதிகரித்து வருகின்றமையினால் மக்கள் வாழ்வாதாரம் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பாதுகாப்பு அணைகள் அமைத்தல், நிலையான கடற்கரை பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார தொழில் வழிகாட்டல் மற்றும் நீண்டகால மறுவாழ்வு திட்டங்கள் ஆகியவையும் முக்கிய தேவைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.மீனவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் உட்பட பல சமூகங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். “இப்போது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் பெரும் மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடி உருவாகும்” என்ற எச்சரிக்கையும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை தொகுதி மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் அபிவிருத்தி தேவைகள் தொடர்பாக இந்நடவடிக்கை முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு 'Light for Learning' வழங்கும் 'பெண்மை எனும் பேராற்றல்; இஸ்லாமிய வரலாற்றின் ஒளிச்சுடர்‘ எனும் தொனிப்பொருளில் "ரமழான் அறிவொளி" வினா விடைப் போட்டி 2026
ரமழான் மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு மூன்று வினாக்கள் எமது முகநூல் தளங்களில் கேட்கப்படும். அதன் சரியான விடைகளை உங்கள் பெயர் மற்றும் முகவரி என்பவற்றை குறிப்பிட்டு 077 44 33 044 எனும் எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.
விடைகள் மற்றும் வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்பு அதே வாரம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். அத்துடன் வாரம்தோறும் சரியான விடையளிப்பவர்களில் பல வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு,பரிசில்கள் வழங்கப்படும்.
போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 👇
https://whatsapp.com/channel/0029Vb7GthPJuyACYNeXGR3H
உங்களுடைய விடைகளை அனுப்ப 👇
☎️ https://wa.me/94774433044
எதிர்பார்த்திருங்கள்!
10/02/2026
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பின்
ஜனாஸாக்களைக் கண்ணியப்படுத்தும் உன்னதப் பணிக்கு சட்டத்தரணி மர்யம் மன்சூர் அவர்களினால் கூடாரங்களுடன் ஒரு தொகை நலன்புரி உபகரணங்கள் வழங்கி வைப்பு
************************************************
“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்" எனும் இறைவாக்கிற்கமைய, ஒரு முஃமின் மரணிக்கும்போது அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கிரியைகளைச் செம்மையாகவும் கண்ணியமாகவும் முன்னெடுப்பதும், அக்குடும்பத்தின் துயரமான வேளையில் நிழலாகவும் ஒளியாகவும் பங்கேற்பதும் ஈருலக நற்பேறுகளைப் பெற்றுத்தரும் மகத்தானதொரு சமூகக் கடமையாகும்.
இப்பெரும் பொறுப்பினைத் தோளில் சுமந்து, சாய்ந்தமருது அல் பதாஹ் ஜும்மா பள்ளிவாசலை மையமாகக் கொண்டு மகத்தான சேவையாற்றி வருகிறது "அல் பதாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பு".
"மனிதர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவர், மற்ற மனிதர்களுக்கு அதிக பயன் அளிப்பவரே" என்ற நபிமொழிக்கேற்ப, ஜனாஸா குளிப்பாட்டுதல், கபூர் தோண்டுதல் முதல் நல்லடக்கம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிகள் வரை இவ்வமைப்பினர் செய்து வரும் தியாகங்கள் அளப்பரியவை.இவ் உயரிய பணியை மேலும் விரிவுபடுத்தி துரிதப்படுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தி, A.R. Munsoor Foundation தலைவியும், சட்டத்தரணியுமான சகோதரி Maryam Munsoor Naleemudeen அவர்களினால் கூடாரத் தொகுதி (Tent Full Sets ), கபூர் வெட்டுவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் மின்விளக்குகள் (Focus Lights) என்பன நிர்வாகத்தினரிடம் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உயரிய மனிதாபிமானப் பணியில் தம்மை அர்ப்பணித்துள்ள அல் பதாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் சகோதரர்களுக்கும், அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலிகளை வழங்கியருள வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்.
04/02/2026
பெண்மையின் முன்னேற்றமே தேசத்தின் முதுகெலும்பு: ஒரு புதிய சமூக மாற்றத்திற்கான சுதந்திர தின உறுதிமொழி..!
நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு முதல் இன்றைய பொருளாதாரக் கட்டமைப்பு வரை பெண்களின் பங்களிப்பு என்பது அளப்பரியது.
உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களை உலகிற்குத் தந்த பெருமை எமது இலங்கைத் திருநாட்டையே சாரும். அத்துடன், இலங்கையின் முதல் பெண் சட்டசபை உறுப்பினரான அடலின் மொலமுரே, இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வீதிகளில் இறங்கி அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்த சுதந்திர வீராங்கனை விவியன் குணவர்தன போன்றவர்கள் முதல், அன்றே இருந்து பெண்களின் அதிகாரத்திற்காகப் பாதையமைத்துக் கொடுத்து வரலாற்றை மாற்றிய சிங்கப் பெண்கள் அவர்கள்...
அவர்களின் அந்த உன்னத வரலாற்றைத் தொடரும் வகையில், எமது சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் குரலாகவும், பெண் ஆளுமைகளின் வழிகாட்டியாகவும் சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீம்தீன் அவர்களின் தலைமையில் எமது அமைப்பின் அறப்பணி என்றும் தொடர்வதுடன், தேசத்தைக் கட்டியெழுப்ப உழைக்கும் ஒவ்வொரு கரங்களையும் நாம் பலப்படுத்தித் தொடர்ந்தும் பயணிப்போம்.
நாட்டின் சுதந்திரத்தை வெறும் அரசியல் வெற்றியாக மட்டும் பார்க்காமல், அது ஒவ்வொரு பெண்ணின் கல்வி மற்றும் பொருளாதார உரிமையாகவும் மாற வேண்டும் என்பதே எமது இலக்குகளில் ஒன்றாகும். பெண்களின் முன்னேற்றமே ஒரு சமூகத்தின் உண்மையான வெற்றி! அனைவருக்கும் எமது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!!
மண்ணின் பெருமை பாடும் “மருதமுனை மான்மியம்”
மகுடம் சூட்டிய “மாண்மிகி விருது”!
மருதமுனை மண்ணின் கலைத்துவத்தையும் பாரம்பரியத்தையும் கொண்டாடும் வகையில், நாணல் கலை இலக்கிய வட்டத்தின் ஐந்தாவது ஆண்டு பூர்த்தி விழா மருதமுனை கலாச்சார மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட A.R. Munsoor Foundation ஸ்தாபகத் தலைவியும், சட்டத்தரணியுமான மர்யம் மன்சூர் நளீம்தீன் அவர்களுக்கு உயரிய “மாண்மிகி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால், அச்சமூகத்தின் பெண்கள் வலுவூட்டப்பட வேண்டும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீம்தீன் அவர்கள். தனது தந்தையார் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் அறப்பணி எனும் வழியில் நின்று; கல்வி, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் அவர் காட்டி வரும் அதீத அக்கறையும், அயராத உழைப்பும் எமது பிரதேசத்தின் பின்தங்கிய நிலையிலுள்ள பல குடும்பங்களுக்குப் புதிய வெளிச்சத்தைத் தந்துள்ளன.
இத்தகைய தூய நோக்கங்களுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு உயரிய ஆளுமைக்கு, நாணல் கலை இலக்கிய வட்டத்தின் இந்த 'மாண்மிகி விருது' வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையானது குறிப்பிடத்தக்கது
அதேபோல், இவ்விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக எமது மண்ணின் வரலாற்றுப் பதிவான “மருதமுனை மான்மியம்”மலரும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. கலை மற்றும் கலாச்சாரத்தின் சங்கமமாக அமைந்த அந்த உன்னத விழாவின் தொகுப்பு இதோ..
30/01/2026
விரல் பிடித்து அகரம் எழுதும் வித்தியாரம்ப விழா
கமு/ அல் ஜலால் மகா வித்தியாலயத்தில்,
29.01.2026 அன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பாடசாலை அதிபர் எம். எம். ஹிர்பகான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், A.R. Munsoor Foundation ஸ்தாபகத் தலைவி, சட்டத்தரணி Maryam Munsoor Naleemudeen, பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததோடு, அனைத்து மாணவர்களுக்கும் புதிய ஆண்டிற்கான புத்தகப் பைகளை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
முதலாம் வகுப்பிற்கு புதிதாக சேர்ந்த சிறார்களின்
விரல் பிடித்து அகரம் எழுதும் இனிய தருணம்
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனங்களில்
மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
மாணவர்களின் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் விழாவிற்கு மேலும் அழகு சேர்த்ததுடன், அவர்களின் மறைந்துள்ள திறமைகளையும் வெளிப்படுத்தும் சிறந்த அரங்கமாக அமைந்தது.
இந்த வித்தியாரம்ப விழா சிறார்களின் கல்விப் பயணத்திற்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமைய வேண்டும் என்ற துஆப் பிராரத்தனையுடன் இனிதே நிறைவுற்றது.
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Telephone
Website
Address
Melbourne, VIC
3030