Jet Media
Global Breaking News | Fast Updates | Cinema News | Entertainment
08/06/2026
இலங்கையில் படப்பிடிப்பில் நடிகர் யோகிபாபு - வைரலாகும் புகைப்படம்
08/06/2026
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரியிருந்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இறுதித் தீர்ப்பு வரும் வரை பொதுவெளியில் அவதூறு பரப்பக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி, கடந்த மே 16 ஆம் தேதி ஜெயம் ரவி செய்தியாளர் சந்திப்பு நடத்தியதாக ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு ரவி மோகன் நீதிமன்றத்தில் மனப்பூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் தனக்கு ஜீவனாம்ச பணம் வழங்கப்படவில்லை எனக் கூறி இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இரண்டு வார காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட அந்த இரண்டு வார காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆர்த்தி ரவி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, காலக்கெடுவை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கக் கூடாது எனத் தீவிரமாக வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் ரவியின் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார். மேலும், ஜீவனாம்சம் தொடர்பான இந்த விவகாரம் குறித்துக் குடும்ப நல நீதிமன்றத்தையே அணுகுமாறும் அறிவுறுத்தினார்.
08/06/2026
அரசியல் நுழைவு குறித்து முக்கிய அறிவிப்பு: தேதி, நேரம் அறிவித்த ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் நுழைவு தொடர்பான முக்கிய அறிவிப்பை வரும் 11ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களில் அவர் தவெக சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் செய்திகள் பரவி வந்தன. இதனால் சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ராகவா லாரன்ஸ், தாம் தற்போது ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதி நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், “என் அம்மாவின் ஆசீர்வாதத்துடன் என் வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவை வரும் 11ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அறிவிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
08/06/2026
ரசிகர்கள் விரும்பிய கௌரி சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறதா? – ரசிகர்கள் வருத்தம்
தொலைக்காட்சி சீரியல்கள் இன்றைய நிலையில் பல குடும்பங்களின் முக்கிய பொழுதுபோக்காக மாறியுள்ளன. இதனால் சன், விஜய், ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ‘கௌரி’ சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தொடரில் கனகா, துர்கா போன்ற கதாபாத்திரங்களில் நடிகை நந்தினி நடித்திருந்தார். அவர் கடந்த ஆண்டு திடீரென உயிரிழந்ததையடுத்து, அவரது கதாபாத்திரத்திற்கு புதிய நடிகை அறிமுகப்படுத்தப்பட்டு தொடர் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது.
கதைக்களம் தற்போது பரபரப்பான நிலையில் சென்றுகொண்டிருக்கும் போது, இந்த சீரியல் கிளைமேக்ஸ் நோக்கி நகர்வதாக கூறப்படுவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
08/06/2026
தந்தையின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகர் விஷால்
நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டியின் பிறந்தநாள் விழா குடும்பத்தினரின் முன்னிலையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
நகைச்சுவை நடிகரான யோகி பாபு இலங்கைக்கு வருகை
07/06/2026
ஜனநாயகன்' ரிலீசில் அடுத்தடுத்து விழும் முட்டுக்கட்டைகள்! விநியோகஸ்தர்களின் பணம் வாபஸ்
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரிப்பில், தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்பான கடைசிப் படம் என்பதால் உலகெங்கும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி பல மாதங்களாகத் தாமதமாகி வரும் நிலையில், தற்போது விநியோகஸ்தர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த தொகை முழுமையாக மீள வழங்கப்பட்டுள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளன.
படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்துத் தயாரிப்புத் தரப்பில் இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படாததால், விநியோகஸ்தர்களின் பொருளாதாரப் பாதுகாப்பைக் கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
'ஜனநாயகன்' திரைப்படத்திற்குப் பொருளாதார ரீதியாக எழுந்துள்ள சிக்கல்கள் ஒருபுறமிருக்க, அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் புதிய அரசியல் எதிர்ப்புகள் முளைத்துள்ளன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் காட்டி வரும் தீவிர நிலைப்பாட்டை எதிர்த்து, சில கன்னட அமைப்புகள் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் கர்நாடக மாநிலத்தில் எங்குமே திரையிட அனுமதிக்க மாட்டோம் எனப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளன.
சினிமா, அரசியல் மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையிலான உணர்வுபூர்வமான எல்லைப் பிரச்சினைகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளதால், படத்தின் எதிர்காலத் திட்டம் குறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
07/06/2026
மலையாள சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சலீம் குமார் உயிரிழப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும் தேசிய விருது பெற்ற கலைஞருமான சலீம் குமார் (வயது 56) உடல்நலக்குறைவால் காலமானார்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் நேற்று காலை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கேரள மாநிலம் பரவூரைச் சேர்ந்த சலீம் குமார், தனது கலை வாழ்க்கையை மிமிக்ரி கலைஞராக தொடங்கினார். பின்னர் 1997ஆம் ஆண்டு வெளியான “இஷ்டமானு நூறு வட்டம்” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.
அதன் பின்னர் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், மலையாள சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்தார்.
2010ஆம் ஆண்டு வெளியான “ஆடமின்டே மகன் அபு” திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். மேலும் பல கேரள மாநில திரைப்பட விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தடம் பதித்த சலீம் குமார், “கருத்த யூதன்” திரைப்படத்தின் கதைக்காக கேரள மாநில அரசின் சிறந்த கதைக்கான விருதையும் பெற்றிருந்தார்.
மலையாள திரையுலகைத் தாண்டி தமிழிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவர், “நேரம்”, “நெடுஞ்சாலை”, “மரியான்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அவரது மறைவு திரையுலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
07/06/2026
நாட்டை பொறுப்பேற்க தயார்: 2029 ஆட்சிமாற்றம் குறித்து ராஜித சேனாரத்ன கருத்து
இலங்கையில் 2029ஆம் ஆண்டுக்கு முன்பாகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வரக்கூடிய சாத்தியம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை சந்தித்தால் அதிலிருந்து மீண்டெழுவது மிகவும் கடினமானதாக இருக்கும் என ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
அத்தகைய நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டின் ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், அவர் சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டுக்கு சாதகமான முடிவுகளை பெறக்கூடியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தனது பொருளாதார மீட்சித் திட்டங்களால் சர்வதேச ரீதியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்டெடுக்கும் பணியில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் இணைந்து செயல்படுவார் எனவும், தேவைப்பட்டால் அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் சமூக அதிருப்தி அதிகரித்து புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதன் அடிப்படையில், 2029ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
07/06/2026
கைதுக்கு பின்பே சங்கீத்சனின் னின் திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது! - இளங்குமரன் எம்பி தெரிவிப்பு
தாயகப் பாடகர் சங்கீத்சன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிக முக்கியமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கைது செய்யப்பட்டவர் சட்டத்தின் அடிப்படையில் நியாயமான விசாரணையைப் பெற்று, சட்டத்தின் ஊடாகவே விடுதலையாக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும் இலக்குமாகும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழலில் ஒரு இளம் பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த சில அரசியல்வாதிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் எமக்கு அது ஆழமான மனவேதனையையே தந்துள்ளது என்றார்.
இன்று காவல்துறையினர் கைது செய்த பின்னரே அந்த இளைஞரைப் பற்றிப் பலரும் பேசுகின்றனர் என்றும், இதுவரை அவரது திறமையையும் படைப்புகளையும் கண்டுகொள்ளாதவர்கள் இப்போது கருத்துத் தெரிவிக்க முன்வருவதாகவும், குறைந்தபட்சம் இப்போதாவது அவரது திறமை வெளிச்சத்திற்கு வந்திருப்பது ஒரு வகையில் சங்கீதனுக்கான வெற்றி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இசை என்பது மக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவம் என்று குறிப்பிட்ட இளங்குமரன் எம்.பி, கலைஞர்கள் தங்களது உணர்வுகளை இசை ஊடாக வெளிப்படுத்தும் போது, அதனால் அவர்கள் பாதிக்கப்படாத வகையில் எதிர்காலத்தில் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பல திறமையான பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் இருந்தும், அவர்களுக்கு முறையான அங்கீகாரமும் பிரதிபலனும் கிடைப்பதில்லை என ஆதங்கப்பட்டார்.
சிலரின் திறமைகள் திருடப்பட்டு, பிறரால் வணிகப் பொருளாதார பலன்கள் பெற்றுக்கொள்ளப்படும் நிலையில், உண்மையான திறமையாளர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்றும், இக்கைதுக்கு முன்னரே அவரது பாடல்களை எத்தனை பேர் கவனமாகக் கேட்டார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் எனக் கூறித் தனது பதிவை நிறைவு செய்தார்.